தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

Published On 2024-01-18 15:54 IST   |   Update On 2024-01-18 15:54:00 IST
  • பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
  • கூடுதலாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

அதன்படி, சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையில், சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை போலீஸ் கமிஷனர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 22 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

பிரதமரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் சென்னை நேரு விளையாட்டரங்கம், சென்னை விமான நிலையம், கிண்டி கவர்னர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கி ராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட, பிப்ரவரி 29-ந்தேதி வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடை முறையில் உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான சென்னை சர்வதேச விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, ராஜ் பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், மேலும் ஐ.என்.எஸ். அடையார் முதல் பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வரை, அங்கிருந்து ராஜ் பவன் வரையிலும் மற்றும் ராஜ் பவனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலும் பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்களோ பறக்கவிட, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களில், ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். ரெயில் பெட்டிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு ஐ.ஜி. லவ்குமார் தலைமையிலான குழுவினர் டெல்லியில் இருந்து சென்னை வந்து உள்ளனர். அவர்கள் சென்னை விமான நிலைய பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமான நிலையத்தில் ஆலோசனை நடத்தினர்.

அப்போது விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய வளாகம் மற்றும் பழைய விமான நிலையப் பகுதிகள் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பழைய விமான நிலையை வளாகத்தில் உள்ள சரக்கு பிரிவு, கூரியர் பிரிவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் விமான நிலைய வளாகத்தி குள், ஓடுபாதை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் வருவதற்கு அனுமதி இல்லை.

நிரந்தர பணியாளர்கள் மட்டும் அடையாள அட்டை களை வெளியில் தெரியும்படி தொங்கவிட்டு பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கூடுதலாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. விமான நிலையத்தில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை அணிவகுப்பு இன்று மாலை 4.30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையத்தில் தொடங்கி ஐ.என்.எஸ். அடையாறு, நேரு விளையாட்டு அரங்கம், கிண்டி கவர்னர் மாளிகை வரை நடக்கிறது. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை, பிரதமர் மோடி சென்னையில் இருந்து, திருச்சி புறப்பட்டு செல்லும், 20-ந்தேதி வரை, அமலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News