3 நாட்கள் நடந்த பட்டம் விடும் திருவிழாவை 40 ஆயிரம் பேர் ரசித்தனர்
- மூன்று நாட்கள் தொடர் விடுமுறை, சர்வதேச விழா, புராதன சின்னங்களை பார்க்க இலவசம் என்பதால் பஸ் பயணிகளும் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
- பட்டம் விடும் விழாவின் மைதானம் அருகில் பிரமாண்ட மேடை அமைத்து அதில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த பட்டம் விடும் திருவிழா நேற்று நிறைவடைந்தது.
நிறைவு நாளான நேற்று மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் தேவநேரி முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை, சர்வதேச விழா, புராதன சின்னங்களை பார்க்க இலவசம் என்பதால் பஸ் பயணிகளும் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பட்டம் விடும் கலைஞர்கள் திருவள்ளுவர், சூப்பர்மேன், யானை, குதிரை, விநாயகர், ஆல்டோபஸ், கதகளி, விநாயகர், கார்ட்டூன் வகைகள் என 100-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பட்டம் விடும் விழாவின் மைதானம் அருகில் பிரமாண்ட மேடை அமைத்து அதில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பட்டம் விட கலந்து கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு கலை ஞர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடந்த 3 நாட்களில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டம் விடும் திருவிழாவை கண்டு ரசித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.