தமிழ்நாடு

கல்குழியில் மூழ்கிய மாணவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் தேடிய காட்சி. 

பெரியநாயக்கன்பாளையத்தில் கல் குழியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி- நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்

Published On 2023-07-23 06:36 GMT   |   Update On 2023-07-23 06:36 GMT
  • திடீரென ஆழமான பகுதிக்கு சென்றனர். வினு, நித்தீஷ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் கல் குழியில் மூழ்கி இறந்தனர்.
  • 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வினு, நித்தீஷ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கவுண்டன்பாளையம்:

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் அருகே உள்ள செட்டிபுதூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வினு (வயது 18). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த நித்தீஷ் (18). டுட்டோரியல் கல்லூரியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் 2 பேரும் அவர்களது நண்பர்களான கோட்டைபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தனுஷ் (21), கூலித் தொழிலாளி சுரேந்தர் (20), அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்த லோகேஷ்ராஜ் (22) ஆகியோருடன் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பிளிச்சி அருகே உள்ள காளவராயன் மலைப்பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 5 பேரும் மது குடித்து ஜாலியாக இருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த வினு, நித்தீஷ் ஆகியோர் மலை அருகே உள்ள கல் குழியில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றனர். வினு, நித்தீஷ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் கல் குழியில் மூழ்கி இறந்தனர். நீண்ட நேரமாக குளிக்க சென்ற நண்பர்கள் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் 2 பேரையும் தேடினர். அப்போது அவர் கல் குழியில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தம் போட்டனர்.

இதனை கேட்ட அக்கம் பக்கதினர் விரைந்து சென்றனர். பின்னர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர் உள்பட 2 பேரின் உடல்களை தேடினர். இரவு 9 மணி வரை 4 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடினார். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இரவானதால் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர்.

இன்று காலை 6.30 மணி முதல் மீண்டும் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வினு, நித்தீஷ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இவர்களை போல நாயக்கனூரை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் நித்யானந்தன் (16) என்பவர் அவரது நண்பர்களுடன் அதே கல் குழியில் குளித்துள்ளார். அவரும் கல் குழியில் மூழ்கி இறந்தார். அவரது உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் போலீசா ர் இறந்த 3 மாணவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News