தூத்துக்குடி தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.53 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
- பரமசிவம் மற்றும் சேதுராமலிங்கம் ஆகியோரை தூத்துக்குடியிலும் கைது செய்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜா என்ற முத்துராஜ் (வயது 45).
இவர் தூத்துக்குடி கீழுர் கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணி செய்தபோது, கூட்டுறவு வங்கியின் காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி அவருக்கு தெரிந்த தூத்துக்குடி அழகேசபுரம் மெயின்ரோடு, பொன்நகரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் (50) மற்றும் தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்த சேதுராம லிங்கம் (53) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து திட்டம் போட்டு, தூத்துக்குடியை சேர்ந்த 22 பேரிடம் தூத்துக்குடி கூட்டுறவு வங்கியில் சிறுதொழில் செய்வதற்கு கடன் தருவதாக கூறி அவர்களிடம், அவர்களுக்கு உரிமையில்லாத முறைகேடான காசோலைகளில் கையெழுத்துக்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு கையெழுத்து பெற்ற 22 காசோலைகளை தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த ராஜாவுக்கு (33) சொந்தமான நிதி நிறுவனத்தில் உண்மையானது போன்றும், அதனுடன் 22 பேரின் ஆதார் கார்டு நகல்களையும் சேர்த்து அந்த நிதி நிறுவனத்தில் வழங்கி கடனாக ரூ.52 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை 3 பேரும் மோசடியாக பெற்று, கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தும், கடன் தொகையை திருப்பி கேட்ட நிதிநிறு வனத்தின் உரிமையாளரான ராஜாவிடம் 3 பேரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்படுகிறது.
இது குறித்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி, முருகன் மற்றும் தலைமை காவலர் வேல்ராஜா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி, முத்துராஜை திண்டுக்கல்லிலும், பரமசிவம் மற்றும் சேதுராமலிங்கம் ஆகியோரை தூத்துக்குடியிலும் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.