தமிழ்நாடு

கோட்டைப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை காணலாம்.

புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

Published On 2022-11-30 05:32 GMT   |   Update On 2022-11-30 05:32 GMT
  • சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் சுமார் 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி சர்வதேச எல்லை அருகே இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 24 பேர் மற்றும் அவர்கள் சென்ற 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

இதற்கிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, உடனடியாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடற்கரையில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

Tags:    

Similar News