தமிழ்நாடு

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 23-வது ஆண்டு தினம்- பல்வேறு மத மந்திரங்கள், பாடல்கள் அர்ப்பணிப்பு

Published On 2022-06-24 15:02 GMT   |   Update On 2022-06-24 15:02 GMT
  • ஈஷாவில் உள்ள தியானலிங்கம் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • நாத ஆராதனை எனும் இசை அர்ப்பணிப்புடன் மந்திர உச்சாடனை நிறைவு பெற்றது.

கோவை:

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 23-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்துவ, சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன.

தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் 'அம் நமசிவாய' மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது.

இதைத் தொடர்ந்து 'புத்த மத உச்சாடனைகளை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் அர்ப்பணித்தனர்.

இதேபோல், அமெரிக்க பழங்குடி மக்களின் பாடல்கள், தென் ஆப்பிரிக்க மந்திர உச்சாடனை, சூஃபி சமய பாடல்கள் போன்றவை இசை அர்ப்பணிப்புகளாக செய்யப்பட்டன.

அத்துடன் ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடாகம்','குரு பாதுக ஸ்தோத்ரம்' ஆகிய 2 சக்திவாய்ந்த மந்திரங்களின் உச்சாடனைகளும் நடைபெற்றன. தேவார பாடல்கள் பாடப்பட்டன.

இந்த உச்சாடனைகளில் ஈஷா ஆசிரமத்தில் வசிப்பவர்கள் பங்கேற்றனர். மாலை 6.10 மணிக்கு 'நாத ஆராதனை' எனும் இசை அர்ப்பணிப்புடன் மந்திர உச்சாடனை நிறைவு பெற்றது.

ஒவ்வொரு வருடமும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஈஷாவுக்கு வந்து இந்நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றதைப்போலவே இந்த வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

ஈஷாவில் உள்ள தியானலிங்கமானது சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7 சக்கரங்களும் உச்ச நிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம் எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர்த் தன்மையை உணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதரசத்தை கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இது தான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News