தமிழ்நாடு
ஐகோர்ட் மதுரை கிளை

கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-05-24 09:17 GMT   |   Update On 2022-05-24 09:17 GMT
கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களில் தற்போது சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாசார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் மேலும் தற்போது-கொரோனா தொற்று பாதிப்புக்கு பின் நடைமுறை தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் காவல் துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை.

இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தர கோரி விடுமுறை கால நீதிமன்றத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தமிழ்ச்செல்வி தனது உத்தரவில், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு பேணப்பட வேண்டும். எந்த பிரச்சினைகளும் வராத வண்ணம் மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்க வேண்டும்.

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியோ ஆபாசமான நடனங்கள் இருக்கக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டு அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டது.


Tags:    

Similar News