தமிழ்நாடு செய்திகள்
தற்கொலை

லாட்டரியில் ரூ.62 லட்சம் இழந்த நூல் கமிஷன் ஏஜெண்ட் தற்கொலை- போலீசார் தீவிர விசாரணை

Published On 2022-05-14 10:45 IST   |   Update On 2022-05-14 10:45:00 IST
லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்து நூல் கமிஷன் ஏஜெண்ட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஆன்லைன் லாட்டரி, வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தி நடத்தப்படும் லாட்டரிகள் குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் கமிஷன் ஏஜெண்ட் ஒருவர் ஈரோட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு பரபரப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

ஈரோடு எல்லப்பாளையம், முல்லை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). நூல் கமிஷன் ஏஜெண்ட். இவரது மனைவி மாலதி (52). இவர்களுக்கு திவ்யபாரதி, ஆனந்தி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இதில் திவ்யபாரதி கணவர் இறந்ததால் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆனந்தி குமாரபாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.  

ஆரம்பத்தில் ராதாகிருஷ்ணன் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். அந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் கமிஷன் ஏஜெண்டாக வேலைபார்த்து வந்தார்.

இந்நிலையில்தான் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை வாட்ஸ் அப் வீடியோ பதிவிட்டு தான் லாட்டரி சீட்டை நம்பி ரூ.62 லட்சம் வரை இழந்துவிட்டேன். இனிமேலும் உயிருடன் இருந்தால் அதற்கு மேலும் அடிமை ஆகி விடுவேன். அதனால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என அந்த வீடியோவில் பதிவிட்டு ராதாகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் கருங்கல்பாளையம் தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் செந்திலிடம் லாட்டரி சீட்டு வாங்கி இருந்ததாக தெரிவித்து இருந்தார்.

இதுபற்றி தெரிய வந்ததும்  வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாட்டரி சீட்டில் ராதாகிருஷ்ணன் ரூ.62 லட்சத்தை எந்த காலகட்டத்தில் எவ்வாறு இழந்தார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டை ஒழிக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 215 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும் லாட்டரி விற்பனையை தடுக்க, ரகசிய தகவலை சேகரிக்க, வாட்ஸ்அப் குழுக்களை ஊடுருவி தகவலை சேகரிக்க தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நூல் ஏெஜண்ட்  ராதாகிருஷ்ணன் லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்து நூல் கமிஷன் ஏஜெண்ட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News