தமிழ்நாடு
இடமாற்றம்

கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூல்: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணியிட மாற்றம்

Published On 2022-04-28 05:10 GMT   |   Update On 2022-04-28 05:10 GMT
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விசாரணை நடத்தி பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்தார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

அதில் ஒரு போலீஸ்காரர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பெயரை குறிப்பிட்டு பெருந்துறை பணிக்கம் பாளையத்தில் கஞ்சா வியாபாரி வீட்டுக்கு சென்று அவரிடம் பணத்தை மட்டும் பறிமுதல் செய்து வியாபாரி மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவரை தப்பவிட்டனர்.

அதேபோல் அடுத்தடுத்த ஆடியோக்களில் பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஊர்க்காவல் படை போலீஸ்காரர் ஒருவர் ஆகியோர் கஞ்சா வியாபாரிகளிடம் எவ்வளவு மாமூல் வாங்குகின்றனர் என்பது குறித்த விவரங்கள் தொடர்பான உரையாடல்களும் வெளியாகின.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விசாரணை நடத்தி பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்தார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக இரண்டாம் நிலை காவலரான ராஜீவ்காந்தி என்பவரை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

Tags:    

Similar News