தமிழ்நாடு
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.

ஊட்டி தாவரவியல் பூங்காவை 2 நாளில் 29 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

Published On 2022-04-16 04:07 GMT   |   Update On 2022-04-16 04:07 GMT
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.
ஊட்டி:

தமிழ் புத்தாண்டு உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 12 ஆயிரம் பேர் வந்திருந்த நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்தது. ரோஜா பூங்காவுக்கு நேற்று முன்தினம் 5,500 பேர் வந்த நிலையில் நேற்று 8,500 வந்திருந்தனர்.

தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு 6 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அதேபோல குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 4 ஆயிரும் பேரும் நேற்று 5 ஆயிரம் பேரும் வந்திருந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு நேற்றுமுன்தினம் 10 ஆயிரம் பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 7 ஆயிரம் பேரும் வந்திருந்தனர்.

மேலும் பைக்காரா அருவி, அவலாஞ்சி, முதுமலை புலிகள் காப்பகம், மேல்பவானி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். தொடர்ந்து மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தாவரவியல் பூங்காவை 29 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.
Tags:    

Similar News