தமிழ்நாடு செய்திகள்
சேலம் மத்திய ஜெயிலில் பல்லியை சாப்பிட்ட கைதி

பெற்றோர் ஜாமீன் எடுக்காததால் சேலம் மத்திய ஜெயிலில் பல்லியை சாப்பிட்ட கைதி

Published On 2022-03-23 11:58 IST   |   Update On 2022-03-23 11:58:00 IST
பெற்றோர் தன்னை ஜாமீனில் எடுக்காத விரக்தியில் பல்லியை சாப்பிட்ட கைதிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் முகமது சதாம் (வயது21). இவர் வழிப்பறி வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இவர் மீது கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்று உள்ளது.

இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது சதாமை, அவரது பெற்றோர் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 3½ மாதமாகியும் அவரை ஜாமீனிலும் எடுக்கவில்லை. இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார். நேற்று மதியம் 12 மணியளவில் முகமது சதாம் சிறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது சுவரில் சென்ற பல்லியை பாய்ந்து சென்று பிடித்த சதாம், அதை சாப்பாட்டில் போட்டு நறுக்நறுக் என்று கடித்து சாப்பிட்டு விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். இதுகுறித்து சக கைதிகள் விசாரித்தபோது பல்லியை சாப்பிட்டு விட்டேன் என்று கூறினார்.

உடனடியாக அங்கிருந்த வார்டன்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டவுடன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர் தன்னை ஜாமீனில் எடுக்காத விரக்தியில் பல்லியை சாப்பிட்டதாக வார்டன்களிடம் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News