தமிழ்நாடு செய்திகள்
சேதமான ஜீப்பை படத்தில் காணலாம்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி: வாடிவாசலை அகற்றிய தாசில்தார் மீது கடும் தாக்குதல்

Published On 2022-03-17 09:41 IST   |   Update On 2022-03-17 09:41:00 IST
சுத்துக்குளம் கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்துக்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவின்போது வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டியும் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா மற்றும் ஜல்லக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

இதில் கோவில் திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தடையை மீறி அக்கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டு கம்பி வேலிகளை அகற்றினர். இதில் ஆத்திரமடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் தாசில்தார் வாகனத்தை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாகனத்தில் உள்ளே இருந்த தாசில்தாரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி சூழ்ந்துகொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஜீப் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலை கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அங்கிருந்தவர்களை விரட்டி விட்டு தாசில்தாரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குண்டவெளி கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிவராமன், பரசுராமன், ராமஜெயம் உள்பட 27 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் அசம்பாவிதங்களை தடுக்க சுத்துக்குளம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாசில்தாரை தாக்கி அவரின் ஜீப் கண்ணாடியை நொறுக்கிய சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News