தமிழ்நாடு செய்திகள்
தனியார் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த ஆசிரியைகள்
அரசு பஸ்கள் ஒடாததால் காரைக்காலில் பணியாற்றும் புதுவை ஆசிரியைகள் இன்று காலை தனியார் பஸ்களில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் புதுவையை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை புதுவைக்கு வந்து குடும்பத்தினரோடு இருந்துவிட்டு மீண்டும் திங்கட்கிழமை அதிகாலையில் காரைக்காலுக்கு செல்வார்கள்.
இதற்கு வசதியாக புதுவை அரசின் சாலை போக்குவரத்துக்கழகத்தின் பஸ் அதிகாலை 4.30 மணிக்கு காரைக்காலுக்கு புறப்படும்.
இந்த பஸ்சில்தான் பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியைகள் காரைக்காலுக்கு செல்வர்.
இந்த நிலையில் இன்று சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போனஸ் கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காரைக்கால் செல்லும் பஸ் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக வேறு வழியின்றி தனியார் பஸ்களில் ஆசிரியைகள் காரைக்காலுக்கு பயணம் செய்தனர்.
பஸ்சில் இருக்கை நிரம்பி இருந்ததால் பஸ்சின் தளத்திலும், படிக்கட்டிலும் அமர்ந்தபடி ஆசிரியைகள் பயணம் செய்தனர்.