தமிழ்நாடு செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் நடிகர் சூர்யா படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சூர்யா படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. ஜெய்பீம் படம் சர்ச்சையை தொடர்ந்து சூர்யா படத்தை தியேட்டர்களில் வெளியிட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டர்களில் வெளியிட கூடாது என கடிதம் வந்துள்ளது.
இதனால் சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேப்போல் சூர்யா படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 38 தியேட்டர்கள் உள்ளன. மாநகர் பகுதியில் 12 தியேட்டர்கள் உள்ளன. இதில் நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மாவட்டம் முழுவதும் 26 தியேட்டர்களில் இன்று ரிலீசானது.
மாநகர் பகுதியில் 5 தியேட்டர்களில் இன்று ரிலீஸ் ஆனது. படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தியேட்டரிலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு அண்ணா தியேட்டரில் இன்று காலை 5 மணிக்கு ரசிகர் ஷோ திரையிடப்பட்டது. அதிகாலை முதலே சூர்யா ரசிகர்கள் தியேட்டரில் திரண்டனர். பட்டாசு வெடித்தும் மேளம் தாளங்கல் உடன் தியேட்டருக்கு வந்தனர். பின்னர் ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி கேக் வெட்டி கொண்டாடினர்.
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள தியேட்டரில் இன்று காலை 9.30 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
இதேபோல் கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை, பவானி உள்பட மாவட்டம் முழுவதும் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.