தமிழ்நாடு செய்திகள்
பண மோசடி

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் ரூ.5½ லட்சம் மோசடி

Published On 2022-03-01 12:32 IST   |   Update On 2022-03-01 12:32:00 IST
தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பணம் பறித்ததோடு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 23 வயது பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

தற்போது அந்த பெண் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் துணிக்கடையில் வேலை பார்த்த போது துணிக்கடையின் மாடியில் தங்கியிருந்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்த காரைக்கால் பூவம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த தினகரன் (24) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர். இதனால் தினகரன் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோரிடம் பெண் கேட்டார். அவரது பெற்றோரும் படித்து முடித்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.

இதற்கிடையே தினகரன் தங்கியிருக்கும் வீட்டில் இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இதனால் இருவரும் நெருங்கி பழகினர்.

இந்த நிலையில் தினகரன் கல்லூரியில் இறுதியாண்டுக்கான கட்டணம் செலுத்துவதற்கு அந்த பெண்ணிடம் பணம் கேட்டார். அதற்கு அவரும் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை கொடுத்தார். இப்படியாக தினகரன் கேட்ட போதெல்லாமல் நேரிலும், ஆன்லைன் மூலமும் ரூ.5 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது.

மேலும் தினகரன் தன்னுடைய பிறந்த நாளுக்கு பரிசாக செல்போன் வாங்கி தருமாறு அவரிடம் கேட்டார். அதற்கு ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை தினகரன் பிறந்தநாளன்று பரிசாக அளித்தார்.

இதற்கிடையே தினகரன் படிப்பு முடிந்தவுடன் காரைக்காலுக்கு சென்று விட்டார். அங்கு சென்ற பின்னரும் அவர்கள் காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தினகரன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் இதுகுறித்து தினகரனிடம் விசாரித்த போது தினகரன் உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை எனவும், மேலும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் எனவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பணம் பறித்ததோடு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட தினகரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News