தமிழ்நாடு செய்திகள்
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 சிறுமிகளின் உடல்.

தாயுடன் குளிக்க சென்ற 2 சிறுமிகள் கிணற்றில் விழுந்து மரணம்

Published On 2022-02-10 11:07 IST   |   Update On 2022-02-10 11:07:00 IST
காவேரிப்பாக்கம் அருகே இன்று காலை தாயுடன் குளிக்க சென்ற 2 சிறுமிகள் கிணற்றில் விழுந்த உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள அம்மனேரி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ரேகா (வயது32). தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவரது மகள்கள் கோமதி (12) அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். தீவிகா (8) 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று ரேகா அவரது மகள்களை அழைத்துக் கொண்டு காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

இன்று காலை அவரது தாய் வீட்டிற்கு சொந்தமான விவசாய நிலத்திலுள்ள பம்புசெட்டில் மகள்களுடன் குளிக்க சென்றார்.

ரேகா பம்புசெட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது கோமதி, தீவிகா இருவரும் கிணற்றின் அருகே சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டனர்.

சத்தம் கேட்டு ரேகா சென்று பார்த்தார். அப்போது 2 சிறுமிகளும் கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை ரேகாவால் மீட்க முடியவில்லை. அவர் அழுது துடித்தபடி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கோமதி, தீவிகா இருவரும் கிணற்றுக்குள் மூழ்கி விட்டனர். சிறுமிகளை நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். 30 நிமிட தேடுதலுக்கு பிறகு இருவரையும் பிணமாக மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காவேரிப்பாக்கம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News