தமிழ்நாடு செய்திகள்
திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம்- தத்து எடுத்து வளர்த்த சுகாதாரத்துறை செயலாளர் வாழ்த்து

Published On 2022-02-07 09:01 IST   |   Update On 2022-02-07 09:01:00 IST
9 மாத குழந்தையாக இருந்த போது சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு நடந்த திருமணத்தில் பங்கேற்று அவரை தத்தெடுத்து வளர்த்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தினார்.
நாகப்பட்டினம்:

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இவர்களில் நாகையை சேர்ந்த 9 மாத குழந்தையான சவுமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகியோர் தங்களது பெற்றோர்களை இழந்தனர். அவர்களை தேடிப்பார்த்த போதிலும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் அப்போது நாகை மாவட்ட கலெக்டராக இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். பின்னர் அங்கிருந்து அவர் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும் அடிக்கடி நாகைக்கு வந்து சவுமியா, மீனாவுடன் நேரம் செலவிட்டு வந்தார். இதனால் குழந்தைகள் 2 பேரும் ராதாகிருஷ்ணனை அப்பா என்றே அழைத்து வந்தனர்.

சவுமியா மற்றும் மீனா ஆகியோருக்கு 18 வயதான பிறகு அவர்களை நாகை புதிய கடற்கரை சாலையை சேர்ந்த மணிவண்ணன், மலர்விழி தம்பதி தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் சவுமியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன்படி மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கப்பட்டது. இவரது திருமணம் நாகையில் நேற்று நடந்தது. இந்த திருமண விழாவில் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளை நான் மட்டும் தத்தெடுத்து வளர்க்கவில்லை. இந்த நாகை மாவட்ட மக்களே வளர்த்துள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து சவுமியாவுக்கு நடத்தி வைத்த திருமணம் இது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும், மலர்விழி, மணிவண்ணனையும் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினர்.


Similar News