தமிழ்நாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

314 கோவில்களுக்கு தரச் சான்றிதழ்- மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்

Published On 2022-01-24 11:04 GMT   |   Update On 2022-01-24 11:04 GMT
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 கோயில்களில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள 314 கோயில்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட பி.எச்.ஓ.ஜி. தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டினார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், சென்னை, தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருமுல்லை வாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில், திருப்போரூர் கந்தசாமி கோயில், மகாபலிபுரம் தல சயன பெருமாள் கோயில், சென்னை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், சென்னை கங்காதீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களின் இணை ஆணையர், செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 கோயில்களில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பழனி தண்டாயுத பாணி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய வற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.76 கோடி செலவில் 754 கோயில்களில் நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகள் சுத்தமாகவும் சுகாதாரத் துடனும் தயாரிக்கப்படுவதை பரிசோதனைக்குட்படுத்தி இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தரச்சான்றிதழ்கள் 6 கோயில்களுக்கு மட்டுமே பெறப்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப் பேற்ற பின்னர், அரசின் சீரிய முயற்சியால் 308 கோயில்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், 440 கோயில்களுக்கு சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News