தமிழ்நாடு
விஜயநல்லதம்பி

பணம் மோசடி புகார்: அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை

Published On 2022-01-17 07:19 GMT   |   Update On 2022-01-17 07:19 GMT
அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி புகாரில் தொடர்புடைய அதிமுக முன்னாள் நிர்வாகியிடம் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் தனது சகோதரி மகனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் விஜயநல்லதம்பியிடம் ரூ.30 லட்சம் கொடுத்ததாகவும், பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டதாகவும் புகார் கூறி இருந்தார்.

இந்த புகார் குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பணத்தை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும், அவர் தான் மோசடி செய்து விட்டார் எனவும் விஜய நல்லதம்பி போலீசில் புகார் தெரிவித்தார். மேலும் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது ராஜேந்திரபாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோர் தலை மறைவாகி விட்டனர்.

இதில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி உச்சநீதி மன்றம் ஜாமீன் வழங்கியதால் தற்போது விடுதலையாகி உள்ளார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி அருகே தனிப்படையினர் பிடித்தனர். அவரை விசாரணைக்காக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கூடுதல் சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு விஜய நல்லதம்பியை விடுவித்த போலீசார் நாளை (இன்று) விசாரணைக்கு ஆஜராகும் படி அறிவுறுத்தினர்.

அதன்படி விஜய நல்லதம்பி இன்று பகல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் வந்தார். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கூடுதல் சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் இன்றும் விசாரணை நடத்தினர். மோசடி புகார்கள் குறித்து பல்வேறு கேள்விகளை அவர்கள் கேட்டனர்.

இதற்கிடையில் விஜய நல்லதம்பியை கைது செய்யாமல் போலீசார் விடுவித்தது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ராஜேந்திர பாலாஜி வழக்கில் போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News