தமிழ்நாடு செய்திகள்
கூண்டில் சிக்கிய அரியவகை மரநாய்

சத்தியமங்கலம் அருகே எலிக்கு வைத்த கூண்டில் அரிய வகை மரநாய் சிக்கியது

Published On 2021-12-27 09:49 IST   |   Update On 2021-12-27 09:49:00 IST
சத்தியமங்கலம், விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட ஒப்பல வடலூர் என்ற இடத்தில் எலிக்கு வைத்த கூண்டில் அரிய வகை மரநாய் சிக்கியது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்து ஊருக்குள் சென்று விவசாயிகள் பயிரிட்டிருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயிகள் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம், விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட ஒப்பல வடலூர் என்ற இடத்தில் சவுந்தராஜன் என்ற விவசாயி தனது தோட்டத்தில் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டுள்ளார்.

மேலும் இவரது நெல் வயல்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்து வந்தது. எலிகள் வயல் வெளியில் புகுந்து நெற்பயிர்களைகளை சேதப்படுத்தி வந்தன. இதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் எலிகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற எலியை பிடிக்க முடிவு செய்து கூண்டு வைத்தார். அந்த கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் சிக்கியது. இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியது ஏராளமான மக்கள் மரநாயை பார்த்தனர். இதுகுறித்து சவுந்தரராஜன் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். வனச்சரகர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் மரநாய் மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. 

Similar News