தமிழ்நாடு செய்திகள்
மீட்கப்பட்ட மூதாட்டி செல்லம்மாளுடன் பெண் போலீஸ் ஆனந்தவள்ளி

தற்கொலைக்கு முயன்ற 76 வயது மூதாட்டியை மீட்ட பெண் போலீஸ்

Published On 2021-12-22 13:48 IST   |   Update On 2021-12-22 13:48:00 IST
பவானி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பெண் காவலர் ஆனந்தவள்ளி தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.
பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஆனந்தவள்ளி. இவர் சம்பவத்தன்று தனது பணியை முடித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு மொபட்டில் சென்றார்.

அப்போது பவானி காவிரி ஆற்றின் பழைய பாலத்தின் மேல் மூதாட்டி ஒருவர் ஏறி தற்கொலை செய்து கொள்வதற்காக காவிரி ஆற்றில் குதிக்க முயன்றார்.

இதைப்பார்த்து பெண் காவலர் ஆனந்தவள்ளி தனது மொபட்டை நிறுத்திவிட்டு ஓடிச்சென்று அந்த மூதாட்டியை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.

தொடர்ந்து அந்த மூதாட்டியிடம் பெண் போலீஸ் ஆனந்தவள்ளி விசாரித்தார். அப்போது அந்த மூதாட்டி தனது பெயர் செல்லம்மாள் (76) என்றும் பவானி அருகே உள்ள வரதநல்லூர் கிராமத்தில் கணவருடன் வசித்து வந்ததாகவும், கணவர் தன்னை விட்டுச் சென்று விட்டார். மேலும் குழந்தைகள் யாரும் இல்லாததால் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன் என கூறினார்.

இதையடுத்து பெண் போலீஸ் ஆனந்தவள்ளி மூதாட்டி செல்லம்மாளை குமாரபாளையத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்து சென்று சேர்த்து விட்டார். மேலும் அங்கிருந்த மூதாட்டிகளுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளை செய்தார். பெண் போலீசின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.



Similar News