தமிழ்நாடு செய்திகள்
ரெயில்

இந்த ஆண்டில் இதுவரை ஈரோடு மாவட்டத்தில் ரெயில் விபத்தில் 58 பேர் பலி

Published On 2021-12-14 10:34 IST   |   Update On 2021-12-14 10:34:00 IST
நடப்பாண்டில் ரெயில் மோதி இறந்த 58 பேரில் 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேரின் அடையாளம் மட்டும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பாண்டில் ரெயில் மோதி மற்றும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 48 ஆண்கள், 10 பெண்கள் உள்ளிட்ட 58 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரோடு ரங்கம்பாளையம் மற்றும் மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் 2 காதல் ஜோடிகள் மற்றும் வாலிபர் ஒருவர் என மொத்தம் 5 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் 39 ஆண்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 47 பேர் ரெயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது ரெயில் மோதி இறந்துள்ளனர். ஓடும் ரெயில்களில் இருந்து 6 பேர் தவறி விழுந்து இறந்துள்ளனர்.

இதில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட வழக்கை மட்டும் சங்ககிரி போலீசாருக்கு ரெயில்வே போலீசார் மாற்றி உள்ளனர். நடப்பாண்டில் ரெயில் மோதி இறந்த 58 பேரில் 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேரின் அடையாளம் மட்டும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Similar News