தமிழ்நாடு செய்திகள்
நடுரோட்டில் நின்ற யானைகள்

மஞ்சூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து நின்ற யானைகள்

Published On 2021-12-14 09:57 IST   |   Update On 2021-12-14 09:57:00 IST
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டுயானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.
மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளது.

இந்த யானைகள் கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் ஆங்காங்கே சாலைகளில் நின்று அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று கோவையில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் அரசு பஸ் மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பெரும்பள்ளம் அருகே சென்றபோது எதிரே குட்டியுடன் 4 காட்டு யானைகள் சாலையை மறித்தபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.

இதேபோல் மஞ்சூரில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளின் வழி மறிப்பில் சிக்கி ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. காட்டுயானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக நடந்து சென்று சாலையோரம் இருந்த மண்பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி சென்றது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி அடைந்தார்கள். இதை தொடர்ந்து அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு மஞ்சூர் சென்றடைந்தது.



Similar News