பக்கிங்காம் கால்வாயில் அதிக அளவு சிக்கும் உணவுக்கு பயன்படாத மீன்கள்
மாமல்லபுரம்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கடல் மீன்கள் அனைத்தும் வெள்ளத்தால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.
இதனால் தற்போது பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வலையில் உணவுக்கு பயன்படாத சிறிய வகை மீன்கள் மட்டுமே பிடிபடுகிறது.
இந்த மீன்களை விற்கவும், பயன்படுத்தவும் முடியாததால் மீனவர்கள் அதனை சாலையோரத்தில் குவியலாக கொட்டிவிட்டு செல்கிறார்கள். நெத்திலி மீனை மட்டும் வீட்டிற்கு எடுத்து செல்கிறார்கள்.
இதனால் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வலை வீசி மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் போதிய வருமானம் இல்லாததால் தவிக்கிறார்கள். பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கிருந்த மீன்கள் கடலுக்குள் சென்றதால் மீன்கள் சிக்கவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.