தமிழ்நாடு
ஒமைக்ரான் வைரஸ்

கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு- தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

Published On 2021-12-03 10:11 GMT   |   Update On 2021-12-03 10:11 GMT
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய லாரிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
கூடலூர்:

கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பு நட வடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநிலத்தில் உள்ள அனைத்து எல்லைகளிலும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழகம், கேரள மற்றும் கர்நாடகா என 3 மாநில எல்லை பகுதிகளை இணைக்க கூடிய பகுதியாக உள்ளது. இங்கிருந்து கர்நாடகாவுக்கு அரசு பஸ்களும், வாகன போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.

தற்போது கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதை தொடர்ந்து கூடலூரில் உள்ள நாடுகாணி சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார், சுகாதாரத் துறையினர், வருவாய்த்துறையினர் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய லாரிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். சோதனை சாவடியில் கார்களை தடுத்து நிறுத்தி கார் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் காரில் இருக்கும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து அவர்களிடம் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்று வைத்துள்ளார்களா? என்பதையும் சோதனை செய்கின்றனர். அப்படி இல்லை என்றால் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என அவர்களிடம் விசாரிக்கின்றனர். ஊசி செலுத்தியிருந்தால் அவர்களை மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

ஊசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பின்னர் அவர்களின் பெயர், முகவரி, அவர்கள் செல்லும் இடம், செல்போன் எண் போன்றவற்றை வாங்கி கொண்டு அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றால் பரிசோதனை செய்து விட்டு சில நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், உடல் நிலை பாதிக்கப்பட்டால் தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். மேலும் அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

காய்ச்சல் அறிகுறிகளுடன் வரக்கூடிய கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை அவர்களது மாநிலத்திற்கே திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

தமிழக-கர்நாடக எல்லையான ஓசூரில் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பஸ் மற்றும் வாகனங்களில் தமிழகம் வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக சுகாதார குழுவினர், செவிலியர்கள் அடங்கிய பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் ரெயில் நிலையத்திலும் கர்நாடகாவில் இருந்த வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்படுகிரது. கூடுதல் சுகாதார பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. போலீசார், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய லாரிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். காரில் இருக்கும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து அவர்களிடம் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்று வைத்துள்ளார்களா? என்பதையும் சோதனை செய்கின்றனர். அப்படி இல்லை என்றால் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என அவர்களிடம் விசாரிக்கின்றனர். காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க ஓசூர் அருகே தமிழக எல்லையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக உள்ள கொரோனா அறிகுறிகளை விட மாற்று அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பஸ்கள் மற்றும் கார்களில் வருபவர்கள் உரிய சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.
Tags:    

Similar News