தமிழ்நாடு செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்கியது

Published On 2021-12-01 09:50 IST   |   Update On 2021-12-01 09:50:00 IST
கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

கடந்த 4 நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர் மட்டமும் 105 அடியை நெருங்கி உள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.49 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 622 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கனஅடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 1,900 கன அடி நீர் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை 105 அடியை நெருங்கி வருகிறது. 105 அடியை தொட்டதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திருப்பி விடப்படும்.

Similar News