திருவண்ணாமலையில் நள்ளிரவில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர் திருவண்ணாமலை மத்தளகுளத் தெருவில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம நபர்கள், சுந்தர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதில் தீப்பற்றி அவரது வீட்டின் சுவர் கரும்புகை படர்ந்து காணப்படுகிறது. இன்று அதிகாலை தூங்கி எழுந்த அவர்கள் வீட்டில் கரும்புகை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அப்போதுதான் அவர்களுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.
தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வெடி குண்டு வீசிய நபர்கள் யார்? என்பது அவருக்கு தெரிய வில்லை.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்ட அவர் இதுபற்றி இன்று காலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக குற்றவாளிகள் யாரும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி இன்று காலை தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.