செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் தடுப்பூசி ஆய்வகத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை ஆய்வு செய்தார். உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய அவர் வலியுறுத்தினார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் விஜயன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஜான் லூயிஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் நிறுவனமான எச்.எல்.எல். நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.