செய்திகள்
அரியலூர் அருகே வாக்குப்பதிவு நாளிலும் உழவுப்பணியில் ஈடுபட்ட விவசாயிகள்
மணகெதி கிராமத்தில் நேற்று விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் நிலங்களில் மாடுகளை கொண்டு உழவு பணிகளை செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணகெதி கிராமத்தில் நேற்று விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் நிலங்களில் மாடுகளை கொண்டு உழவு பணிகளை செய்தனர். அவர்களிடம் ஓட்டுப்போட்டு விட்டீர்களா? என்று கேட்டபோது, மாலையில் ஓட்டு போட்டுக்கொள்ளலாம். வயிற்றுப் பசியை போக்க காலத்தே வேலை செய்தால் தான் வெள்ளாமையை பார்க்க முடியும் என்று கூறினார்கள்.