செய்திகள்
தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த காட்சி

மொடக்குறிச்சி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உறவினர் வீட்டில் திடீர் சோதனை

Published On 2021-04-01 12:36 IST   |   Update On 2021-04-01 12:36:00 IST
மொடக்குறிச்சி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உறவினர் வீட்டில் பறக்கும் படையினரின் சோதனை நடத்தியது பா.ஜனதா கட்சியின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.
ஈரோடு:

தி.மு.க. சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் மொடக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக அவர் மொடக்குறிச்சி அடுத்த சின்னம்மாபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி தேர்தல் பணிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தங்கியிருந்த உறவினர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவு 12 மணிக்கு அவரது உறவினர் வீட்டுக்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை 2:30 மணி வரை நடந்தது. ஆனால் இந்த சோதனையில் எந்தவொரு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கிடைக்காததால் பறக்கும் படையினர் திரும்பி சென்றனர்.

பறக்கும் படையினரின் இச்சோதனை பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலின் பேரில் நடை பெற்றதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.



Similar News