செய்திகள்
ஈரோட்டில் வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகம்
ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
ஈரோடு:
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், பழ ஜூஸ், தர்ப்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை வாங்கி விரும்பி குடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருவதால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு வெள்ளரி பிஞ்சுகள் விற்பனைக்கு வரவில்லை. தற்போது ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளரி பயிரிடப்பட்டு உள்ளது. இவைகள் இன்னும் விளைச்சலுக்கு வரவில்லை. தற்போது மணப்பாறை பகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு வெள்ளரி பிஞ்சுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு கிலோ வெள்ளரி பிஞ்சு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரிக்க தொடங்கினால் வெள்ளரி பிஞ்சுகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது’ என்றார்.