செய்திகள்
கொலை

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2021-02-12 12:53 IST   |   Update On 2021-02-12 12:53:00 IST
மயிலாடுதுறையில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை கீழபட்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அருள் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு இவர் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள குதிரைகள் கட்டிவைக்கப்பட்டுள்ள கொட்டகையில் தூங்கினார். இன்று காலை அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அருளை தட்டி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அந்த கும்பல் அரிவாளால் அருளை சரமாரியமாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அருள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருளின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக அருள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News