செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்

Published On 2021-01-12 12:53 IST   |   Update On 2021-01-12 12:53:00 IST
பட்டா வழங்கிய இடத்தை சீரமைத்து தரக்கோரி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி சித்தோடு, நல்ல கவுண்டன்பாளையத்தில் இலவச வீடு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடம் பாறை, கரடு, முரடாக இருப்பதால் சமன் செய்து தரக்கோரி கடந்த நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் நல்ல கவுண்டன்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சமன் செய்து தருவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் ஒரு நாள் மட்டுமே எந்திர உதவியுடன் பணிகள் நடந்தது. ஆனால் அதன் பிறகு பணிகள் நடக்கவில்லை.

இந்நிலையில் நிலத்தை அளவீடு செய்து சமன் செய்து தர கோரி 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று மதியம் தொடங்கினர். தாசில்தார் பரிமளாதேவி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2.1 ஏக்கர் நிலம் முழுவதும் பாறைகளாக உள்ளது. இதனை சமன் செய்ய ரூ.15 லட்சம் வரை செலவாகும். சமன் செய்து தருகிறோம். எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என்று கூறினார். ஆனால் நீங்கள் பணிகளை தொடங்கி முடிக்கும் வரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம். என்று மாற்றுத்திறனாளிகள் கூறிவிட்டனர்.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் கடும் குளிரில் கொசுக்கடியில் விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பெண்கள் குழந்தைகள் மட்டும் இரவு வீட்டிற்கு சென்று விட்டனர். ஆண் மாற்றுத்திறனாளிகள் அங்கேயே போர்வை விரித்து தூங்கி விட்டனர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டம் நடத்த இடத்திலேயே அவர்கள் உணவு சமைத்து சாப்பிட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Similar News