செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

2 மாத முதியோர் உதவித்தொகை: ரூ.29.65 கோடி வழங்க கவர்னர் ஒப்புதல்

Published On 2021-01-04 03:52 GMT   |   Update On 2021-01-04 03:52 GMT
புதுவையில் 2 மாதத்திற்கு முதியோர் உதவித்தொகையாக ரூ.29 கோடியே 65 லட்சம் வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை அரசிடம் இருந்து கடந்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை அனுப்பி வைக்கப்பட்ட 27 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஆதிதிராவிட மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரை படிப்பதற்கான அனைத்து கல்வி கட்டணங்களையும் அரசே ஏற்க ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் உள்ளேயும், புதுச்சேரியில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக பஸ்களை இயக்க இல்லாத வழித்தடங்களை குத்தகை அடிப்படையில் தனியாருக்கு அளிப்பது தொடர்பான கோப்புக்கு மேற்கொண்டு விவரங்கள் கேட்டுள்ளார்.

உள்ளாட்சித்துறை மூலம் மத்திய அரசின் ஜல் ஜீவன் மி‌‌ஷன் திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட வழிமுறைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார்.

சட்டத்துறையில் உதவி நூலகம் மற்றும் தகவல் அதிகாரி நியமனம் தொடர்பான கோப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். ஸ்டேனோகிராபர் கிரேடு-2 பணியிடத்துக்கு பிராந்திய மொழியில் நடக்க விருந்த தட்டச்சு தேர்வை ரத்து செய்ய அனுமதி வழங்கியுள்ளார். 1 லட்சத்து 54 ஆயிரத்து 847 முதியோருக்கு கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்துக்கான உதவித்தொகை வழங்க ரூ.29 கோடியே 65 லட்சத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தானத்துக்கு ஒரு பெண் உள்பட 5 பேர் கொண்ட புதிய நிர்வாக அறங்காவல் குழு நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த குழு 3 ஆண்டுகள் பதவியில் இருக்கும்.

புதுவை அரசு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு (பி.டி.டி.சி) சம்பளம் வழங்க ரூ.75 லட்சத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பி.டி.டி.சி.யில் விஜயன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் பணிக்கு வாக்குப்பெட்டி, காகிதம், பேப்பர் ஸ்டிப் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News