செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

மரக்காணத்தில் திமுக கிராமசபை கூட்டம்- பொதுமக்களிடம் குறைகேட்ட மு.க.ஸ்டாலின்

Published On 2020-12-25 08:51 GMT   |   Update On 2020-12-25 08:51 GMT
மரக்காணம் பேரூராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மரக்காணம்:

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இதற்கிடையில் தன்னிச்சையாக கிராம சபை கூட்டம் யாரும் நடத்த கூடாது அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஆனாலும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டத்தை இன்று காலை நடத்த தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.

இதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கார் மூலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்துக்கு காலை 10 மணிக்கு வந்தார்.

முன்னதாக அவருக்கு மாவட்ட எல்லையில் தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் கிராம மக்களிடையே பேசினார்.

அப்போது இந்த பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் செய்து கொடுக்கப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. இணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பொன்முடி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News