செய்திகள்
கொலை

சூளகிரி அருகே மிளகாய் பொடி தூவி புதினா வியாபாரி குத்திக்கொலை

Published On 2020-12-19 12:30 IST   |   Update On 2020-12-19 12:30:00 IST
சூளகிரி அருகே இன்று பட்டப்பகலில் புதினா வியாபாரியை மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தொட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 55). புதினா வியாபாரி.

இவர் இன்று காலை 8 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார்.

அப்போது சூளகிரி - கும்பளம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு மர்ம கும்பல் வழிமறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜப்பா, மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கினார். உடனே மர்ம கும்பல் திடீரென மிளகாய் பொடியை அவரது கண்ணில் தூவினர். இதில் கண்ணில் எரிச்சல் அடைந்ததால் அவர் கூச்சல் போட்டப்படி, மர்ம கும்பலிடம் இருந்து உயிர் தப்பிக்க ஓடினார்.

ஆனால் மர்ம கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று, கத்தியால் வயிற்றில் குத்தினர். இதில் ராஜப்பா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதைத்தொடர்ந்து ராஜப்பா இறந்ததை உறுதி செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த கொலை குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சூளகிரி டி.எஸ்.பி. முரளி, இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட ராஜப்பா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பிறகு கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, ராஜப்பா உடல் அருகே கிடந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ராஜப்பா, நிலத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

தொட்டூர் கிராமத்தில் ராஜப்பாவுக்கு சொந்தமாக 30 சென்ட் நிலம் இருந்தது. இதுதொடர்பாக அங்கு பக்கத்து நிலத்தை சேர்ந்த சிலருக்கும், ராஜப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக ராஜப்பாவை மர்ம கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

கொலையுண்ட ராஜப்பாவுக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

Similar News