செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த பட்டதாரி ஆசிரியர்கள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-12-19 12:17 IST   |   Update On 2020-12-19 13:04:00 IST
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபி:

கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வெழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கணினி பழுது காரணமாக செல்போன் மூலமாக அந்த தேர்வு அறையில் இருந்தவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.

இதனால் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை என்று கூறியது.

அதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கோபியில் மீண்டும் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தனர்.

அப்போது ஓரிரு நாளில் முதல்-அமைச்சரிடம் கலந்து பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியதை தொடர்ந்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News