செய்திகள்
வீராணம் ஏரி

விரைவில் நிரம்புகிறது வீராணம் ஏரி- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2020-12-03 06:29 GMT   |   Update On 2020-12-03 06:29 GMT
வீராணம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோர பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக திருமண மண்டபங்கள், முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த 2 நாட்களாக காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 45.90 அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி வடவாறில் இருந்து ஏரிக்கு வரும் நீர் குறைக்கப்பட்டு 51 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்தது. தற்போது ஏரியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஏரியில் இருக்கும் தண்ணீரை வி.என்.எலஸ். மதகு வழியாக 90 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் செங்கால்ஓடையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று காலை வரை 41 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர் மழை காரணமாக நேற்று மதியம் அது 110 கனஅடி நீராக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி வடவாறில் இருந்து வரும் தண்ணீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர் மழை காரணமாக வடவாறுக்கும் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் வடவாறில் இருந்து இன்று மதியத்துக்கு மேல் 900 கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட உள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயரக்கூடும். அதற்கேற்ப ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து வீராணம் ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மணல் மூட்டைகளை கொண்டு வீராணம் ஏரியின் கரையை பலப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் வீராணம் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதி பொதுமக்களிடையே வீராணம் ஏரி நிரம்பி வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

வீராணம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோர பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக திருமண மண்டபங்கள், முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக ராட்சத குழாய் மூலம் 68 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News