செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

ராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து நாராயணசாமி உண்ணாவிரத போராட்டம்

Published On 2020-10-02 14:09 IST   |   Update On 2020-10-02 14:09:00 IST
ராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காகாந்தி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை உத்தரபிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட களேபரத்தில் ராகுல்காந்தி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கீழே விழுந்தார். போலீசார் அவரை கைது செய்து டெல்லிக்கு திருப்பி அனுப்பினார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் வைரலாக பரவியது. இதனையடுத்து காங்கிரசார் பல்வேறு மாநிலங்களில் ராகுல் காந்தியை தாக்கி கைது செய்த உத்தரபிரதேச போலீசாரை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவையிலும் இளைஞர் காங்கிரஸ், மகிளா, மாணவர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இன்று மாநில காங்கிரஸ் சார்பில் புதுவை அண்ணா சிலை அருகே ராகுல்காந்தியை தாக்கி, அவரை கைது செய்ததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்தார்.

இதன்படி இன்று காலை 9 மணியளவில் அண்ணா சிலை அருகே காங்கிரசார் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

போராட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலகண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட, வட்டார, அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசையும், உத்தரபிரதேச பா.ஜனதா அரசையும் கண்டித்து பேசினர். இன்று மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் முடிவடைகிறது.

Similar News