செய்திகள்
தரம் பிரித்த பூண்டுகளை மூட்டைகளில் நிரப்பி கட்டும் பணி நடந்த காட்சி.

ஊரடங்கால் வேலையிழப்பு- பூண்டு சாகுபடியில் சாதனை படைத்த பட்டதாரி

Published On 2020-09-07 09:08 IST   |   Update On 2020-09-07 09:08:00 IST
ஊரடங்கால் வேலையிழந்தாலும் மசினகுடியில் விவசாயம் செய்து பூண்டு சாகுபடியில் பட்டதாரி வாலிபர் அபிமன்யு சாதனை படைத்துள்ளார்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மகன் அபிமன்யு(வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரி. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலையிழந்த அபிமன்யு, மசினகுடியில் விவசாயம் செய்தார். சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பூண்டு பயிரிட்டார். சுமார் 3 மாதங்கள் நன்கு பராமரித்ததால், பூண்டு விளைச்சல் அமோகமாக இருந்தது. இதில் 9 ஆயிரம் கிலோ பூண்டு அறுவடை செய்யப்பட்டது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.

ஊரடங்கால் வேலையிழந்தாலும், பூண்டு சாகுபடியில் சாதனை படைத்த பட்டதாரி வாலிபர் அபிமன்யு கூறியதாவது:-

ஊரடங்கால் வேலையிழந்த பிறகு எனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்தேன். சுமார் 3 மாத உழைப்புக்கு பிறகு அறுவடை செய்த பூண்டுகளை விற்பனை செய்தேன். அதில் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. மசினகுடி பகுதியில் விளையும் பூண்டுக்கு மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் கிராக்கி உள்ளது. இதனால் எதிர்பார்த்த வருமானம் கிடைத்தது. தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்து இருந்தாலும், இந்த வருமானம் கிடைத்து இருக்காது. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் அந்த வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளேன். மேலும் ஆதிவாசி மக்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. இது தவிர மன திருப்தி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News