செய்திகள்
இ-பாஸ்

வியாபாரத்துக்கு இ-பாஸ் அனுமதி பெற்று ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்- பொதுமக்கள் அச்சம்

Published On 2020-09-06 11:54 IST   |   Update On 2020-09-06 11:54:00 IST
வெளியூர் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் வியாபாரத்திற்கு வருவதாக இ-பாஸ் பெற்று சுற்றுலாவுக்கு வந்து ஊட்டியில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

ஊட்டி:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இதுவரை இருந்து வந்த இ-பாஸ் நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்கும் விதமாக இ-பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய, அவசர மற்றும் பணி நிமித்தமாக வருபவர்கள் மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் மாவட்டத்திற்கு தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று குன்னூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையோரங்களில் ஏராளமான வெளி மாவட்ட பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதில் வந்த பயணிகள் சாலையோரம் இருந்த இயற்கைகளை ரசித்து தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

ஊட்டி வேலிவியூ பகுதிக்கு சுற்றுலா வந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அங்குள்ள தேயிலை தோட்டங்களுக்கு இடையே சென்று இயற்கை அழகை ரசித்தபடி நின்று குடும்பமாக புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதவிர எல்ஹில் பகுதியில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெளியூர் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் வியாபாரத்திற்கு வருவதாக இ-பாஸ் பெற்று சுற்றுலாவுக்கு வந்து ஊட்டியில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட மக்கள் கூறுகையில், வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஊட்டி பகுதிகளில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பலர் குடும்பம், குடும்பமாக சுற்றுலாவுக்கு வருகின்றனர். அவர்களை உடனடியாக திரும்ப மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அவர்கள் திரும்பாமல் இங்கேயே தங்கி உள்ளனர்.

மேலும் அவர்கள் முறையான கொரோனா பரிசோதனைகள், விதிமுறைகளையும் கடைபிடிப்பதும் கிடையாது. இதன் காரணமாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News