செய்திகள்
கவர்னர் கிரண்பேடி தவறான தகவல்களை கொடுக்கிறார்- அமைச்சர் குற்றச்சாட்டு
கவர்னர் கிரண்பேடி தவறான தகவல்களை கொடுப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரிசோதனைகளை தற்போது கிராமப்புறங்களிலும் மேற்கொள்கிறோம். சிகிச்சை அளிப்பது தொடர்பாக தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வருகிற 10-ந் தேதிக்குள் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 படுக்கைகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் நாள்தோறும் புதுச்சேரியை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி உள்ளோம். அவர்களுக்கு தேவையான உணவுக்கான தொகை, மருந்து, பாதுகாப்பு கவச உடைகள் தருவதாக உறுதியளித்துள்ளோம். இதேபோல் தொகுதிதோறும் பரிசோதனை நடத்தும் முகாமும் தொடங்கி உள்ளது.
அடுத்தட்டமாக சுகாதார பணியாளர்களை கொண்டு வீடுவீடாக சென்று ஆய்வு நடத்த கூறியுள்ளோம். அதாவது ஒரு வீட்டில் 60 வயதுக்கு மேல் மற்றும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உள்ளோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் அதுதொடர்பான குறிப்புகள் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்படுகிறது. கவர்னர் கிரண்பேடி மத்தியக்குழு தனது கட்டுப்பாட்டில் உள்ளதுபோல் செயல்படுகிறார். மக்கள் மத்தியில் அவர் தவறான தகவல்களை கொடுத்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.