செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் 203 கடைக்காரர்கள் மீது வழக்கு
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 203 கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இறைச்சி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்ட்வேர் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறந்து செயல்பட்டு வருகிறது. கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் அல்லது வட்டங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தரையில் வரையப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ தண்ணீர், சோப்பு வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் சமூக இடைவெளி கடைகளில் பின்பற்றப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 203 கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.