செய்திகள்
பிரியங்கா, மீனலோட்சினி

கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை

Published On 2020-07-04 06:09 GMT   |   Update On 2020-07-04 06:09 GMT
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி எல்.இ.பி. தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவர் காட்டுமன்னார்கோவிலில் உள்ள சுயஉதவி குழுவில் தவணை தொகை வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவரும் காட்டுமன்னார்கோவில் அருகே ஆட்கொண்டநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா(22) என்பவரும் காதலித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் மீனலோட்சினி என்ற பெண் குழந்தை இருந்தது.

கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. பாலமுருகனின் குழந்தைக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பிறந்த நாள் விழா நடைபெற இருந்தது. இதனை சிறப்பாக கொண்டாட பிரியங்கா முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் பாலமுருகனுக்கும், பிரியங்காவுக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியங்கா, தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி பாலமுருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றதும், அவர் தனது குழந்தை மீனலோட்சினியின் கழுத்தில் சேலையை கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரும் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News