செய்திகள்
கொரோனா வைரஸ்

கதிர்காமம் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் திருடனுக்கு கொரோனா

Published On 2020-06-22 16:33 IST   |   Update On 2020-06-22 16:33:00 IST
கதிர்காமம் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் திருடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை போலீசார் மரப்பாலம் சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அரியாங்குப்பம் ராம்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த ரமணா (வயது 24) என்பதும், மோட்டார் சைக்கிளை அவர் திருடிக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து ரமணாவை போலீசார் கைது செய்தனர். அவர் தெரிவித்த தகவலின்பேரில் 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் அடைப்பதற்கு முன் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக ரமணாவை கதிர்காமம் கொரோனா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனைக்காக உமிழ்நீர் உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில் இயற்கை உபாதைக்காக கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக ரமணா கூறிச் சென்றார். நீண்டநேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்து கழிவறையை திறந்து பார்த்த போது அங்கிருந்த ஜன்னலை உடைத்து தண்ணீர் குழாய் வழியாக ஏறி தப்பி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டது. இதனால் ரமணாவை கைது செய்த முதலியார்பேட்டை போலீசார் 6 பேர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் பணியாற்றி வந்த முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் முழுவதும் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனால் அங்கு பணிசெய்யும் மற்ற போலீசாரும் திருடனுடன் தொடர்பில் இருந்தவர்களும் பீதியில் உள்ளனர். தப்பி ஓடிய ரமணாவால் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் அவரை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News