செய்திகள்
துபாயில் இருந்து பில்லாலி பகுதிக்கு வந்த பெண்னை சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர்.

கொரோனா வைரஸ் உள்ளதா?- துபாயில் இருந்து வந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2020-03-23 12:29 IST   |   Update On 2020-03-23 12:29:00 IST
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் துபாயில் இருந்து வந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

நெல்லிக்குப்பம்:

துபாயிலிருந்து சத்யா என்கின்ற பெண் நேற்றிரவு நெல்லிக்குப்பம் அருகே பில்லாலி பகுதிக்கு வந்தடைந்தார். இத்தகவல் காட்டுத் தீ போல் அந்தப் பகுதியில் பரவியது. இதனைத்தொடர்ந்து இந்தப் பெண் முழுமையான சோதனைக்கு பிறகு இங்கே வந்தாரா? என்பது அந்த பகுதி மக்களுக்கு சரியான முறையில் தெரியவில்லை.

இதனால் பீதியடைந்த இந்த பகுதி மக்கள் நேற்று காலை திருவந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சுகாதார ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து புறப்பட்டு பெங்களூரு மற்றும் சென்னை வழியாக முழு மருத்துவ பரிசோதனை செய்து கொரானோ வைரஸ் அறிகுறியோ அல்லது பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காராமணிக் குப்பம் பகுதியில் கேரளா மாநிலத்திற்கு கரும்பு வெட்டும் பணிக்காக கணவன் சுப்பிரமணி, மனைவி விஜயா ஆகியோர் சென்றுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு காராமணி கும்பத்திற்கு வந்துள்ளனர். அதன்பிறகு 2 பேருக்கும் சளி, இருமல் தொடர்ச்சியாக இருந்து வந்தது.

இத்தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவியை சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அப்போது சாதாரண சளி மற்றும் இருமல் இருந்தது தெரியவந்தது. மேலும் இவர்களை உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியிலுள்ள கல்லூரியிலிருந்து விடுமுறை விடப்பட்டதால் மாணவர் திருக்கதிர் காரமணிக்குப்பத்திற்கு வந்தார்.

இந்த மாணவரையும் சுகாதாரத்துறையினர் மருத்துவ சோதனை செய்தனர். அவருக்கு எந்த பாதிப்பு இல்லை என தெரிவித்து சென்றனர். 

Similar News