ஈரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட பந்தலில் திருமணம் செய்த வாலிபர்
ஈரோடு, மார்ச். 7-
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் .இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த கூடாது. தமிழக சட்டசபையில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் செல்ல பாஷா வீதியில் இஸ்லாமியர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் நேற்று 15-வது நாளாக நீடித்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை போராட்ட களத்தில் வைத்து ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சலீம்பாஷாவுக்கும், மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த அஸ்விதாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
மணமக்களை ஏராளமானோர் வாழ்த்தினர் பின்னர் இனிப்பும், இரவு விருதும் வழங்கப்பட்டது. மணமக்கள் அஞ்சாதே போராடு, வேண்டாம் சி ஏ.ஏ, என்.பி.ஆர், என் .ஆர் .சி, என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று 16-வது நாளாக இஸ்லாமியர்களின் காத்திருப்பு போராட்டம் நீடித்து வருகிறது. இன்று நடந்த போராட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். * * * மணமக்கள் அஞ்சாதே போராடு, வேண்டாம் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி. என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கையில் வைத்திருந்த காட்சி.