கடலூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக கூட்டணி 15 இடங்களை கைப்பற்றியது
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிபேட்டை, மேல் புவனகிரி, கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், மங்களூர், குமராட்சி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், நல்லூர் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த மாதம் 27, 30 ஆகியே தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற்றது.
29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு மொத்தம் 155 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
விடிய விடிய ஓட்டுகள் எண்ணப்பட்டதால் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று காலையும் பல்வேறு இடங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதன்பின்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விபரம் வருமாறு:-
இதில் அ.தி.முக. வேட்பாளர்கள் 12 இடங்களில் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் 2 பேரும், தே.மு.தி.க. வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் 11 பேரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்கள் 2 பேரும், ம.தி.மு.க. வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அ.தி.மு.க. கூட்டணி 15 இடங்களை கைப்பற்றி உள்ளது. தி.மு.க. கூட்டணி 14 இடங்களை கைப்பற்றியது.இதன் மூலம் மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி அ.தி.மு.க. கூட்டணி தக்கவைத்துக் கொண்டது. ஏற்கனவே கடலூர் மாவட்ட ஊராட்சிகுழு தலவராக அ.தி.மு.க.வை சேர்ந்த மல்லிகா வைத்தியலிங்கம் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.