செய்திகள்
விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி.

விருத்தாசலத்தில் கர்ப்பிணி பெண் மரணம் - ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை

Published On 2020-01-02 06:54 GMT   |   Update On 2020-01-02 06:54 GMT
விருத்தாசலத்தில் பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி பெண் திடீரென மரணமடைந்ததால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆலடியை அடுத்து உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27) இவரது மனைவி ப்ரியா (24). இவர்கள் கடந்த 11.5.2018 காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ப்ரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த 27 -ந் தேதி இரவு ப்ரியாவுக்கு பிரசவ வலிஏற்பட்டது. உடனே அவர் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவு 11. 40 மணிக்கு சிசேரியன் மூலம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து 4 நாட்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை கடந்த 31-ந் தேதி மோசமடைந்தது மேலும் வயிறு வீக்கம் ஆக இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற ப்ரியா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ப்ரியாவின் வயிற்றில் பழைய துணி மற்றும் பஞ்சுகள் இருந்ததாகவும், இதனால் அவரது வயிறு வீங்கி உடல் நிலை மோசமடைந்து இறந்துவிட்டதாகவும், டாக்டர்களின் அஜாக்கிரதை காரணமாக ஒரு உயிரை கொன்று விட்டதாகவும், கூறி சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட ப்ரியா குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கூறி உறவினர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தாசில்தார் கவியரசு மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். ப்ரியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் செவிலியர்கள் வந்து சிகிச்சை தவறால் தான் பிரியா இறந்தார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். மேலும் தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளிக்க வேண்டும் என கூறி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரிடம் பிரியாவின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி புகார் கொடுத்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News