செய்திகள்
கொலையுண்ட மணிகண்டன் பிணமாக கிடக்கும் காட்சி.

பொன்னமராவதி அருகே நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை

Published On 2019-12-24 17:21 IST   |   Update On 2019-12-24 17:21:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் பொன்னமராவதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் மணிகண்டனின் பாட்டிக்கு சொந்தமாக அப்பகுதியில் நிலம் உள்ளது. அதனை அதே பகுதியை சேர்ந்த சுப்பையா மகன்கள் மணிராஜா (25), சரவணன் (22) ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. பலமுறை ஆக்கிரமிப்பில் இருந்து விலகி கொள்ளுமாறு கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனை தட்டிக்கேட்ட மணிகண்டனை அவர்கள் தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மணிகண்டனின் பாட்டியை, மணிராஜா, சரவணன் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

இதுபற்றி மணிகண்டனிடம் அவரது பாட்டி கூறினார். ஆத்திரமடைந்த அவர் சுப்பையா வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மகன்கள் மணிராஜா, சரவணன் ஆகியோரிடம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். மேலும் இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதில் மணிகண்டன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் காரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் மணி ராஜா, சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நிலம் ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News